தெற்கிலிருந்து
வரும் ஈழக்காற்று
இரத்த
வாடையுடன் வீசுகிறது.
அக்காற்று
இரக்கத்தையோ, கருணையையோ
எதிர்பார்க்கவில்லை.
நிஜத்தைச் சுமந்து வந்து
முகத்தில் அறைகிறது!
ஈழத்து
மாந்தர்கள்
விம்மி...விம்மி...விம்மி...
விம்மியழுங்குரல்
கேட்டுக் கண்ணீர் விடுதல் கூட
இறையாண்மைக்கு எதிராகிப் போன தேசத்தில்
தேசப்பிதா மாத்திரமே சிரித்துக்
கொண்டிருக்கிறார்
ரூபாய் நோட்டுகளில் கேலியாக!
போதி
மரத்தைச் சுற்றிலும்
எலும்புகளும் சதையும் சிதறிக்கிடக்கிறது
சிங்களக் கழுகுகள் போதி மரக் கிளைகளில்
அமர்ந்து “யுத்தம் சரணம் கச்சாமி,
இரத்தம் வேணும் கச்சாமி”
என வாழ்த்திசைக்க
சித்தார்த்தன் நரமாமிசம்
புசித்துக் கொண்டிருக்கிறான், ருசித்து!
ராமனும்
ராவணணும் கூட்டுசேர்ந்து
அணில்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்
பொழுது போக்காக!
ஈழத்தின்
தெருக்களில், கழனிகளில், காடுகளில்
ராவணபக்சே கோடுபோட்டுக் கொடுக்க
சீதை சில்லு விளாயாடிக் கொண்டிருக்கிறாள்,
ரசித்து!
சிபிச்
சக்ரவர்த்தியின் வரிசையில் வந்தவர்கள்
அடைக்கலப் புறாக்களை அறுத்து,
கழுகுகளுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
சட்டப்படி!
பாதகத்தாய் ( என் நாக்குக் குழறவில்லை சரியாகவே சொல்கிறேன்)
பாதகத்தாய் மீன்களை அல்ல
மீனவர்களையே அறிந்து
குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறாள்!
கெளரவர்கள் (கதர் என்றால் கெளரவம் என்று பொருள்)
மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றியவர்கள்
கைகழுவி விட்டார்கள்- விருந்து முடிந்து.
எனவேதான் அன்னவர்களை நாங்களும்
கைகழுவ வேண்டியதாயிற்று.
இது
ஓர் எச்சரிக்கை மாத்திரமே,
எமக்கு எதிரானவர்களுக்கும்
எமக்கு எதிராக சிந்திப்பவர்களுக்கும்!
சில
காரணங்கள், சில காரியங்கள்,
சில சமரசங்கள் அவ்வளவே,
வெறுமனே சாமரம் வீசுதலும்
லாலி பாடுதலும் எமது இயல்பல்ல.
இனி
நியாயத் தீர்புக்கான நாள் வரும்
அன்று உங்களிடம் இல்லாத இரக்கத்தை
எங்களிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
எங்கள்
கவிஞர்கள் வீதிகளில்
இறங்குவார்கள்-அன்று
அவர்களின்
கரங்களில் எழுதுகோல்
இருக்காது!
எங்கள்
இளைஞர்கள்
நீங்கள் அவர்களிடம் திட்டமிட்டே
திணித்துள்ள
கிரிக்கெட் மட்டைகளை
வீசி எறிந்து விட்டு
இணைந்து எழுவர்
அன்று அவர்களின்
கரங்களில்
பந்து இருக்காது!
மக்களே!
இந்த தேசம் தேசிய இனங்களை
இறையாண்மை என்னும் மாயக்கயிற்றால்
இணைத்து அல்ல பிணித்து வைத்துள்ளது.
வேற்றுமையில்
ஒற்றுமையாம்
யாருக்கு? டாட்டாக்களுக்கும்,
கோயங்காக்களுக்கும்,
அம்பானிகளுக்கும், மிட்டல்களுக்கும்.
காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை
அதையும் தாண்டி இலங்கையிலும்
காடுகளை, மலைகளை, மனிதர்களைச்
சுரண்ட அவர்களுக்கு வேண்டும்
சுரண்ட அவர்களுக்கு வேண்டும்
“வேற்றுமையும் அதற்குள்
குந்தியிருக்கும் ஒற்றுமையும்.”
ஆனால்,
எங்களுக்கு வேற்றுமை என்றால் வேற்றுமைதான்
ஒற்றுமை என்றால் ஒற்றுமைதான்!
நீ வேற்றுமை என்கிறாயா?
ஒற்றுமை என்கிறாயா?
பந்து உன் பக்கம் தான் இருக்கிறது.
இறுகப்பிணித்த இரும்புச் சங்கிலியின்
கண்ணிகள் தெறித்துவிழும் ஓர்நாள்!
அன்று தீர்ப்புகளும் நியாயங்களும்
திருத்தி எழுதப்படும்.
அதுவரை, ஆடுங்கள்!
இன்று
பார்வையாளர்களாக இருக்கும்
நாங்கள் அன்று ஆடுவோம்!
அது
அன்னா ஹசாரேக்களின், ராம்தேவ்களின்
ஒத்திகைப் பார்க்கப்பட்ட
“நீ அடிப்பது போல அடி
நான் அழுவது போல அழுகின்றேன்”
என்பதான
“தெருக்கூத்தாக இருக்காது
ஊழிக்கூத்தாக இருக்கும்!”
No comments:
Post a Comment