"காலத்தின் கள்ள மௌனத்தை உடைத்து
அப்பாலுக்கும் அப்பாலான
அந்தரமான பாழ் வெளியில்
விஸ்வரூபமெடுக்கும் பிம்பங்களின்
காலாதீதமான பிதுக்கலின்
ஜாலம்,சமிக்ஞை,பிரக்ஞை என
ரீங்கரித்து பால்ய காலத்தின் விழுமியங்களை விகசித்து
கசித்து,சித்து,த்து,து,தூ வென
கனவுகளை உமிழும்
விச்ராந்தியான மனோலயக்கட்டுடன்
சுகந்தமானநாற்றத்தினு£டே
பயணித்து, மரணித்து
தூலமான சொப்ன பிரதிமைகளை
நிஜமென நம்பி ஸ்பரிசிக்கும்
கரங்களை வெட்டி
வேள்வித்தீயில் இடுவாள் என்
ஆதித்தாய் காளாமுகி.
“பத்திரமடி கண்ணகி
எரித்து விடாதே!”
- கவிதாங்கதன்
கவிதய படிச்சீங்களா? இது சம்பந்தமா 'கருக்கல்' ஆசிரியருக்கும் சம்பந்தப்பட்ட கவிஞருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் : யாருக்கு போன்?
ஆசி : இதோ. . . இந்தக் கவிதய எழுதுன கவிஞருக்குத்தான்
நான் : இப்ப எதுக்கு அவருக்கு போன்?
ஆசி : கவித ஒரு மண்ணும் புரியல.
நான் : புரியலன்னா. . தூக்கிப்போடுங்க. . அவருகிட்ட என்ன. . . இதபத்தி. . .
ஆசி : பேசுவோம்(என்னிடம் பேசிக் கொண்டே கவிஞருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்) இல்ல. . .
நா லூஸா அந்த ஆளு லூஸான்னு தெரியணும். . . அதான்.
நான் : அப்ப சரி
ஆசி : என்ன சரி?
நான் : சரின்னேன்.
= = =
ஆசி : அலோ. . . கவிதாங்கதனா?
கவி : ஆமா. . . நீங்க. . . ?
ஆசி : நா. . கருக்கல் ஆசிரியர் பேசுறேன். . .
கவி : ஓ. . . சார். . . . நீங்களா. . . வணக்கம், நான் எதிர்பார்க்கவே இல்ல.
ஆசி : உங்கள்ட்ட ஒன்னு கேக்கணும். . . அதான்.
கவி : கேளுங்க சார்
ஆசி : ஒன்னுமில்ல. . . நீங்க அனுப்பியிருந்த கவித. . .
கவி : கவிதயா. . . படிச்சீங்களா. . . நல்லாருக்கா. . . நல்லாருக்கா. . .
ஆசி : நல்லாருக்கு. . . ஆனா. . . புரியல.
கவி : என்ன புரியல?
ஆசி : கவித. . . புரியல.
கவி : புரியலையா. . . எங்க புரியல?
ஆசி : எங்கையுமே புரியல.
கவி : குறிப்பா. . .
ஆசி : குறிப்பாவா. . . ஒன்னுமே புரியலேங்குறேன். . .
கவி : நல்லா படிச்சிங்களா?
ஆசி : நாலு தடவை படிச்சுட்டேன்
கவி : சார். . . தப்பா நெனைக்கக் கூடாது கவிதங்கறது அப்படியே ‘சட்’ ன்னு புரிஞ்சுடணுங்கிறது இல்ல... அப்புறம் எல்லாருக்கும் புரியணும்ங்கறதும் இல்ல.
ஆசி : சரிங்க கவிஞரே. . . எனக்குப்பத்தாது. . . என்னால புரிஞ்சுக்க முடியல. . . நீங்க தான் சொல்லுங்களேன். என்ன தான் எழுதியிருக்கீங்க?
கவி : அது வந்து சார். . . எப்பிடி சொல்றது. . . ஆங். . . ஒரு மன அவஸ்த. இதுவா. . இது இல்லையா, அதுவா. . . அது இல்லையா, சரியா. . . சரியில்லையா. . . ஒரு மனத்தகிப்பு. . . இப்படி. . . .
ஆசி : காதுக்குள்ள யாரோ கிசுகிசுப்பா பேசறா மாதிரி இருக்கா. . . ?
கவி : என்ன சார். . . கிண்டலா?
ஆசி :ஆமாய்யா. . . ஒரு புண்ணாக்கும் புரியலேங்கிறேன். மேக்கொண்டு குழப்பி கும்மியடிக்கிறீங்க? கவிதன்னா. . . ஏதாச்சும் சொல்லணும்ல. . . எளிமையா. . . இதுதான்னு கொஞ்சமாச்சும் புரியணும்ல. . .
கவி : நவீன கவிதைகளை நீங்க சரியா புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். கவிதன்னா கவித தான். அது ஒன்னும் செய்தி பத்திரிகை இல்லை. கவிஞன் ஒன்னும் பத்திரிகை நிருபனும் இல்ல. அப்பறம் கவித எளிமையா இருக்கணும், சட்னு புரியணும் அப்பிடின்னு உங்களுக்கு யார் சொன்னா? திருக்குறள் படிங்க ‘சட்’ னு புரியும் எளிமையாவும் இருக்கும்.
ஆசி :ஓ. . . உங்க கவிதையெல்லாம் திருக்குறளுக்கு மேலயாக்கும். . .
கவி : நா. . . அப்படி சொல்லல. . . கவித இப்ப உங்களோட அளவீடுகளையெல்லாம் தாண்டி எங்கையோ போயிடிச்சு. . . இருண்மை,மாஜிக்கல் ரியலிசம் இப்படி. . . நீங்க இன்னும் நெறைய படிக்கணும்னு நெனைக்கிறேன். . . போர்ஹே என்ன சொல்றார்னா. . .
ஆசி : இருங்க. . . இருங்க. . . போர்ஹேயெல்லாம் வேணாம். . . பக்கத்துல இருக்காரு, ராமசாமி என் நண்பர், அவருக்கும் ஒன்னும் புரியலையாம். அவருக்கிட்ட பேசுறீங்களா. . . என்ன அவரு பேச்சு கொஞ்சம் கரடா இருக்கும். . .
கவி :பரவால்ல. . . பரவால்ல. . . நமக்குள்ளேயே பேசுவோம். நீங்க இன்னும் நெறைய வாசிக்கணும். . . அதான்.
ஆசி : எத. . . இந்த மாதிரி கவிதகளையா? அப்புறம் எங்காதுக்குள்ள யாராவது பேசுவாங்க. . . ஆமா. . . அதென்ன
இருண்மை?
கவி : இருண்மையா. . . உங்களுக்குப் புரியறா மாதிரி சொல்றேன். இப்ப. . . நல்ல இருட்டு. . தூரத்துல ஒரு மாடு நிக்கிதுன்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது யானையா தெரியுது. உங்களுக்கு மாடு, எனக்கு யானை. இதுல எது உண்மை. . . ? சொல்லுங்க சார். என்ன பேச்சையே காணும்.
ஆசி : எனக்கு வாயடைச்சுப்போச்சு. . . அதாவது ‘நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை. நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை’, அதான. . . ?
கவி : இல்ல. . இதுல நாம ரண்டு பேரும் பாக்குறது ஒன்னுன்னு ஆவுது. அது அப்படியில்ல.
ஆசி : சரி. . . ‘உன் பார்வை போலே என் பார்வை இல்லை. நீ கண்ட காட்சி நான் காணவில்லை’ சரிதான?
கவி : அதான் அதேதான். . . சரியா. . வந்துட்டீங்க!இப்ப கேள்வி என்னன்னா மாடு உண்மையா யானை உண்மையா. . . நல்லா கவனிங்க. ரெண்டும் உண்மை மட்டுமல்ல, ரெண்டும் பொய். எப்பிடி. . . புரியுதா?
ஆசி : சரி. . . மேல சொல்லுங்க.
கவி : மேல என்ன. . . அவ்வளவுதான். கவிதயில கவிஞன் என்ன சொல்றாங்கறது முக்கியமில்ல. படிக்கிறவன் என்ன புரிஞ்சுக்கிறான். அவன் ஒன்னு புரிஞ்சிக்கிறான் இவன் ஒன்னு புரிஞ்சுக்கிறான். . . நா வேறொன்ன புரிஞ்சிக்கிறேன். வாசகன்கிறவன் வெறும படிக்கிறவன் மட்டுமில்ல அவனே கவிஞனும் ஆகிறான், அவன் கவிஞனையும் தாண்டிப்போகிறான், எழுதி முடிக்கிற மட்டும் தான் கவித கவிஞனுடையது. அப்புறம் அது தானே பயணிக்குது. அப்படி கவித தன்னைத் தானே வழிநடத்திக்கலன்னா அது கவித இல்ல. புரியச் செய்கிறது, புரியாமல் இருக்கிறது, காலத்துக்காலம், கணத்துக்குக்கணம், இடத்துக்கு இடம் வேறுபாடு காட்டுறது. அதுமட்டுமில்ல சில நேரங்கள் அது வெறும் வார்த்தையாக மட்டும் கிடக்கிறது. அதுக்காவ கவலைப்படக்கூடாது.
ஆசி : யார் கவலப்படக் கூடாது?
கவி : எழுதுபவனும் கவலப்படக்கூடாது, படிக்கிறவனும் கவலபடக்கூடாது.
ஆசி : சரி. . . போதும். . . புரிஞ்சிக்கிட்டேன் போன வச்சிடறேன்.
= = =
நான் : என்ன. . . சார்?
ஆசி : என்ன நொன்ன சார்?
நான் : இல்ல பேசுனீங்கள. . . முடிவு பண்ணிட்டிங்களா?
ஆசி : என்ன முடிவு பண்றது?
நான் : இல்ல. . . யாரு லூசுன்னு. . . ?
(ஆசிரியர் முறைத்தார் ;நான் அவரை அப்படியே விட்டு விட்டு வெளியில் சென்று விட்டேன்)
நமக்கு ஒன்றும் கவிதைகள் மீது பகையோ கவிஞர்கள் மீது காழ்ப்போ கிடையாது. சொல்லப்போனால், கவிதைகளைத் தேடித்தேடி வாசிப்பவன். ஒரு நல்ல கவிதை வாசிக்கக்கிடைத்தால், உடனடியாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவன் நான். ஒரே ஒரு நல்ல கவிதை ஒரு மனிதனின் ஒரு நாளையேனும் மகிழ்ச்சிகரமானதாக்குகிறது. வேறென்ன, அதுபோதும். ஆனால், சமீபகாலமாகப் படிக்கக் கிடைக்கும் கவிதைகளெல்லாம் மனதில் எந்த வித அசைவையும் ஏற்படுத்த மறுக்கின்றன. செத்து விரைத்துக் கிடக்கும் எலியைப் போல அறுவருப்பைத் தருகின்றன.
ஒரு நல்ல கவிதை மலர்ச்சியைத் தர வேண்டும், படித்து முடித்தால் பெருமூச்சு வர வேண்டும், மனதைக் கிளர்த்த வேண்டும். ஒரு கவிதை மனிதனை எதுவுமே செய்யவில்லை என்றால், என்னத்துக்கு அது? கவிதைகள் கோட்பாட்டுச் சிக்கலுக்குள் சிக்கிக்கிடக்கின்றன. இருளை வெறித்துக் கொண்டிருக்கின்றன. அலுப்பான மொழியில், சகிக்க முடியாத வகையில் செய்யப் படுகின்றன.
எனவே, வாசிப்பவன் கவிதை களிடமிருந்து ஒதுங்கி நிற்கிறான். தங்களுடைய துயரங்களையும் மகிழ்ச்சி யையும் எளிய வடிவில் தங்களுக்குத் தெரிந்த புரியக்கூடிய சொற்களில் எழுதிக் கொண்டிருந்த கிராமத்து இளைஞர்களை, தற்போதைய, நவீன கவிதைகள் மிரட்சி கொள்ளச் செய்கின்றன.
இருண்மைக்கவிதைகளுக்கு இடையில், எப்போதாவது ஓரிரு அசலான கவிதைகள் கிடைக்கின்றன, அப்படி ஒரு கவிதை ஏப்ரல் 2012 ‘உயிர்எழுத்து’ இதழில் வாசிக்கக் கிடைத்தது.
பாடவேளை &ஆர். ஜெயந்தி என்பவர் எழுதியது. பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது முதல் வகுப்பு மாணவி ஒருத்தி, தன்னைத்தானே ஆசிரியையாக நியமித்துக் கொண்டு வகுப்பு நடத்தும் அழகு, கவிதையாக்கப்பட்டுள்ளது.
‘நிமிடங்களுக்கு ஏற்றவாறு
முகத்தை மாற்றிக் கொண்டேயிருந்தாள். -
வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொண்டே
குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்,
இடது கையைத் திருப்பித் திருப்பி
மணி பார்த்துக் கொண்டேயிருந்தாள். ’
கவிஞர் தன் கவிதைக்காகத் தேர்ந்த சூழலும், கருப்பொருளும்,வடிவமும் மனதில் அலையாக நிகழ்வை கண்முன் காட்சிப் படுத்துகிறது. அந்த மாணவியின் உருவம், அவள் உடை, அவளின் ஒற்றை சடை என கற்பனை செய்துகொள்ள கவிதை நம்மை அனுமதிக்கிறது.
‘மதிய பாடவேளை தொடங்க
என் வகுப்பு ஆரம்பமானது
நான் என்ன பாடம் நடத்த?’
என்ற முடிப்பில் கவிதையின் முழு அழகும் நம்மை வீழ்த்திவிடுகிறது.
இப்படியான ஒரு கவிதையை வாசிக்க எப்போதாவது தான் வாய்க்கிறது.